யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியதாக, 35 சந்தேகநபர்களுக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத கூட்டம் கூடியமை, நீதி அமைச்சுக்குச் சொந்தமான நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சிறைச்சாலைக்குச் சொந்தமான சொத்துக்கு சேதம் விளைத்தமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நீதிமன்றில் சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படவுள்ளன. 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு யாழ்ப்பாணம் நகரில் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள், அந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிடப்பட்ட சுவிஸ்குமாரை யாழ்ப்பாணம் நீதிமன்றுக்குள் வைத்துள்ளதாகத் தெரிவித்து நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கல்லெறித் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சூழ கலவரம் ஏற்பட்டதால் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கட்டம் கட்டமாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 72 பேருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது. அதில் 35 பேருக்கு எதிராக நீதிமன்றக் கட்டடம் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் சிறைச்சாலை வாகனத்தைத் தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழும் ஏனையோருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியமை, யாழ்.நகரில் பொலிஸ் காவலரணைத் தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் சிறைச்சாலை மீது கல் எறிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.