13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்துடன் ஐந்து தமிழ் கட்சிகள் இணைந்து வந்தால், அது தொடர்பாக பேசத் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். அதில் எந்த பயனும் இல்லை. இதுதான் இந்த நாட்டின் பிரச்சினை. இப்படிதான் மக்களை ஏமாற்றுகின்றனர்.
இந்த 13 விடயங்கள் குறித்து பேசிப் பயனுள்ளதா? வடக்கு கிழக்கை இணைக்க கோருகின்றனர். ஒற்றையாட்சியை நீக்குமாறு கோருகின்றனர். இவற்றை செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. கடந்த 72 வருடங்களாக இதனையே செய்து வருகின்றனர்.
தற்போதும் இதனையே செய்ய முயற்சிக்கின்றனர். இதுவொரு பொய் முயற்சி. நான் யதார்த்தத்தையே பேசுவேன். இந்த 13 விடயங்களை அடிப்படையாக கொண்டு அவர்களை சந்திப்பதற்கு கூட தயார் இல்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று கேட்டால் அதற்கு பதிலளிக்க தயார். அப்படியாயின் தமிழ் கட்சிகளை சந்தித்து பேசலாம். ஆனால் 13 விடயங்கள் தொடர்பாக பேசமாட்டேன்.
இந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை பேசுவதற்கு தயார் இல்லை. ஆனால் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? என்னால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால் அதற்கு நான் பதிலளிக்க தயாராக இருக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.