ஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய திரு.எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல் கல்முனையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தனது கருத்தில் தெரிவிக்கையில்.. ,
90% வீதம் காணி விடுவிக்கப்பட்டுள்ளது என கதை விட்டுக்கொண்டிருக்க தேவை இல்லை. 98 அரசியல் கைதிகளை விடுவிக்க வக்கற்றவர்களுக்கு தான் நான் 6ம் திகதி காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்.
அதன் பின்னர், பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுவேன். இப்போதே எனக்கு நூற்றுக்கு மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வருகின்றன. இதற்கெல்லாம் அச்சப்பட போவதில்லை. 90 % வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றால் விவாதிக்க தயாரா? தயார் என்றால் வாருங்கள் விவாதிப்போம்.
என்னைக் கைது செய்தாலும் பரவாயில்லை. ஆயினும் எனக்கு வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பது பிரச்சினை அல்ல. தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேசத்திற்கு தெரிய வேண்டும். அதனால் தான் இத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.
இதை தெரிந்தால் என்ன அடித்து உடைத்து அழித்த பிறகு தெரிந்தால் என்ன கொன்றால் கூட பரவாயில்லை. இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கும் பங்கு உண்டு என்பதை உலகிற்கு காட்டுவதே எனது நோக்கம். பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை.
ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் எவருமே படித்துக் கூடப் பார்க்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். என சுட்டிக்காட்டியுள்ளார்.