தமிழ் பத்திரிகை துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என்று அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86வது வயதில் நேற்று காலமானார்.
இரத்தினபுரியில் 1933ம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த கால பகுதியிலேயே பத்திரிகை துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பத்திரிகைத் துறையை ஆரம்பித்தார்.
பின்னர் 1961ம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமலர் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின்னரான கால பகுதியில் உதயன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
55 வருடங்களாக பத்திரிகை துறையில் பணியாற்றிய அவர் தனது 84வது வயதில் 2017ம் ஆண்டு பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நேற்றைய தினம் அவர் இயற்கை எய்தினார்.
மறைந்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாளின் விருப்பத்தின் பேரில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவப் பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்கு கையளிப்பட்டுள்ளது.