எமது வாக்குப் பலத்தினை சரியான முறையில் உச்ச அளவில் பிரயோகிப்பதன் ஊடாகவே எமது எதிர்கால நலன்கள், அதிகாரப்பங்கீடு, அரசியல் கைதிகளது விடுதலை மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் இயல்பு நிலைமை என்பனவற்றை தற்காத்துகொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சி தீர்மானித்துள்ளது என, அக் கட்சியின் ஊடகத்துறை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுமையான விவரம் வருமாறு!
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை தெரிவு செய்யும் தேர்தல் ஒன்றினை நாம் விரைவில் எதிர்கொள்ள இருக்கிறோம்.
எமது உறவுகளே!
தெற்காசிய பிராந்திய நலன் சார்ந்து ஒரு விடுதலைப் போராட்டம் பயங்கரவாத முலாம் பூசி இலங்கை தீவின் குடிகளான தமிழினத்தின் மீது மாபெரும் அழிவுகளை ஏற்ப்படுத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் அனுகூலத்தினை தமிழினம் பயன்படுத்திகொள்ள வேண்டிய ஒரு அவசியமான தேர்தலாகவே இதனை நாம் கருதுகிறோம்.
தமிழர்களது வாக்குகளே இது வரையில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஆதிக்கசக்தியாக இருந்து வந்துள்ளது. அது வாக்களிப்பின் ஊடாகவும் வாக்களிப்பை தவிர்ப்பதன் ஊடாகவும் இடம்பெற்றுள்ளது.
அவ் வகையில் பல வேட்பாளர்கள் இத் தேர்தல் களத்திற்கு வந்திருந்தாலும் இரு வேட்பாளர்களுக்கிடையிலேயே போட்டிகள் உச்சம் பெறுகிறது. அவ் வகையில் எமது வாக்குபலத்தினை சரியான முறையில் உச்ச அளவில் பிரயோகிப்பதன் ஊடாகவே எமது எதிர்கால நலன்கள், அதிகாரப்பங்கீடு அரசியல் கைதிகளது விடுதலை, மற்றும் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கும் இயல்பு நிலைமை என்பனவற்றை தற்காத்து கொள்ளும் வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சர்வதேச மற்றும் பிராந்திய அரசுகளுடன் இசைந்து செல்லதக்க சட்டத்தின் ஆட்சியினை மதித்து. நிலைநிறுத்தக் கூடிய குறிப்பாக, குடும்ப ஆட்சி முறைக்கு முற்றுபுள்ளி வைத்து செயலாற்றக் கூடியவராக நாங்கள் திரு. சஜித் பிரேமதாசாவை கருதுகிறோம்.
அவ்வகையில் ஜனநாயக போராளிகள் கட்சியினர் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் திரு சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கின்றோம்.
அன்பான எமது மக்களே!
தேர்தல் தினத்திலன்று தாயகப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்கள் அதி உச்சமாக வாக்கு பதிவொன்றினை மேற்கொண்டு எங்களுக்கான ஜனாதிபதியை நாங்களே தீர்மானிப்போம்.
நன்றி
க.துளசி
ஊடகப்பிரிவு,
தலைமைச்செயலகம்,
ஜனநாயக போராளிகள் கட்சி.