நாங்கள் கோட்டாவின் ஆள் என்றால், நீங்கள் மகிந்தாவின் ஆளா? என விக்கினேஸ்வரனிடம் ஜனநாயாக போராளிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நாம் கோட்டாவின் ஆள் என்றால், வட மாகாணசபையில் வெற்றிபெற்ற பின்னர் மகிந்தவுடன் சென்று குடும்ப படம் எடுத்த நீங்கள் மகிந்தவின் ஆளா? என்று ஐனநாயக பேராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் துளசி கேள்வி எழுப்பியுள்ளார்.ஐனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துகளிற்கு பதில் அளிக்கும் விதமாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்த்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
நாம் ஐனநாயக அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகின்றோம். குறிப்பாக, மகிந்த, கோட்டாபய, ரணில் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் போன்ற பலரை நாம் சந்தித்திருக்கின்றோம்.
இந்த இடத்தில் விக்கினேஸ்வரனிடம் ஒரு கேள்வியை முன் வைக்கின்றேன்.
கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஐனநாயக போராளிகள் கட்சி கோட்டாபயவை ஆதரித்ததாக எந்த விதமான சாட்சிகள், ஆதாரங்கள் இன்றி தீர்ப்பு வழங்கியுள்ளீர்கள். நாங்கள் ஆதரித்தது ரணில் தலைமையிலான சஜித் பிரேமதாசவை என்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிற்கு நன்கு தெரியும். இந்தக் கருத்தானது கடந்த காலத்தில் நீங்கள் வழங்கிய நீதிமன்ற தீர்ப்புக்களையே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
எனவே, அவரது கடந்தகால தீர்ப்புக்கள் தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆராயவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
வடக்கு மாகாணசபைக்கு விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், மகிந்தவிடம் சென்று பதவி ஏற்றதுடன், தனது குடும்பத்துடன் சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருந்தார். அப்படியானால் நீங்கள் மகிந்த ராயபக்சவின் ஆளா? நீங்கள் சந்திப்பது அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என்றால், நாங்கள் சந்தித்தால் கோட்டாவின் ஆள் என்று முத்திரை குத்துவீர்களா இது தான் உங்களின் நியாயமா?.
நாம் இந்த மண்ணுக்காக போராடிய போராளிகள் எந்த தரப்பானாலும். எம்மை அழைத்து பேசுவதற்கான தகுதி எமக்குள்ளது. நீங்கள் இத்தேர்தலிலே இணைத்து போட்டியிடும் அணிகளை அவர்கள் வாசலுக்கு கூட எடுக்க மாட்டார்கள். தகுதி, தராதரம், மக்கள் மீதான அபிமானம், மக்களிற்கு வழங்கும் சேவைகளை கருத்தில் கொண்டுதான் ஐனாதிபதியும், பிரதமரும் எவரையும் அழைத்து பேசுவார்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.
வடமாகாண ஆட்சியை 5 வருடங்கள் ஐயாவிற்கு வழங்கினோம். அதற்கு அதிகாரம் இல்லை என்றார். வேலை செய்வதற்கு தன்னைவிடவில்லை என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார். இவர் நாடாளுமன்றத்திற்கு சென்றும் இதே கதையைதான் சொல்லப்போகின்றார்.
இதே போல அவருக்கு அருகில் இருந்த ஒருவரும் குறுக்காலபோன போராளிகள் என ஒரு கதையை கூறியிருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கருத்துக்களிற்கு நாம் பெரியளவில் பதில் அளிக்க விரும்புவதில்லை. சிவாஜி அண்ணை ஒருநேரம் குழு மாட்டுச் சந்தியில் நிற்பார். மறுநாள் மன்னார் வீதியில் நிற்பார். அவருக்கு ஒன்றை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
எமது குருதி இந்த மண்ணில் சிந்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் போரில் ஆயுதம் ஏந்தி நாம் போராடியிருக்கின்றோம். இந்த நிலையில், நீங்கள் எங்களை குறுக்காக போன போராளிகள் என்று சொல்கிறீர்கள்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்களை அரவணைத்து ஆயுதப் போராட்டத்தை வழி நடத்திக் கொண்டு சென்ற போது, டெலோவின் பக்கம் சென்றவரே நீங்கள்.
இன்று மாவீரர்களை பற்றியும், தலைவர்களைப் பற்றியும், எந்த அருகதையுடன் பேசுகின்றீர்கள்.
நீங்கள் யார் ஐனாதிபதித் தேர்தல் ஏன் கேட்கிறீர்கள் என்று எமது மக்களுக்கு தெரியாதா. இனிமேல் போராளிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும் கவனத்துடன் செயற்படுங்கள்.
போராளிகள் மரக்கறிக் கடைகளில் வேலை செய்தவர்கள் அல்ல. இறைச்சிக்கடையை வைத்திருந்தவர்கள்.
நீங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளிற்கு உங்கள் அனைவரையும் தலைவர் 2001 ஆம் ஆண்டு அழைத்து வந்து உங்களிற்கு வெள்ளையடிக்கப்பட்டது.
இன்று 10 வருடங்கள் கழித்து பழையபடி பன்றி போய் சேத்துக்குள் கிடப்பது போல, உங்களது விளையாட்டுக்களை காட்டுகின்றீர்கள்.
கருணா வரலாற்று நாயகன் என்றும். அவரை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று சிவாஜிலிங்கம் ஒரு கருத்தை சொல்லியிருந்தார்.
கருணா செய்த காட்டிக் கொடுப்புக்கள், துரோகங்களிற்காக தலைமை செயலகத்தால் கலைக்கப்பட்டவரே கருணா. ஆனால் இந்த பேராட்டம் மௌனிக்கப்படும் வரை தமிழ் கூட்டமைப்பை நிராகரிக்குமாறு தலைவர் சொல்லவில்லை.
கருணா மூவாயிரம் இராணுவத்தை கொல்லவில்லை. கருணா என்ற தனி மனிதனால் தான் இலட்சக்கணக்கான மக்கள் முள்ளிவாய்ககாலில் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
இந்த பழி இன்றும் கருணாவுடன் இருக்கின்றது. இன்று போலித் தேசியம் கதைத்துக் கொண்டு தமிழ் மக்களிற்கான தீர்வை பெற்றுத் தருவதாக கூறி அம்பாறையில் அவர் போட்டியிடுகின்றார்.
தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு, அதாவுல்லாவை கொண்டு வருவதே அவரது வேலைத்திட்டம்.
அதாவுல்லா வெற்றி பெற்றால் அவருக்கு ஒரு அமைச்சு வழங்கப்படும். இவருக்கு எலும்புத் துண்டை போட்டு தேசியப் பட்டியல் நியமனம் ஒன்று வழங்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.